Saturday, June 6, 2009

மழை அழகின் ஓர்துளி நீ.....



நீயும் நனைந்தாய்
நானும் நனைந்தேன்
நம்மோடு சேர்ந்து
தானும் நனைந்து
நடுங்கியது மழை!

*

அடித்து பெய்யும்
மழையில் கரைகிறது
ஏதாவது ஒரு காதலின்
கண்ணீர்!

*

மழை
மழையை மட்டும் கொணர்வதில்லை
சில நேரங்களில்
சில தேவதைகளையும்!

*

நனைந்து சுகித்திருந்த
உன்னை அம்மா
இழுத்துப் போக
சோவென அழத்தொடங்கியது
மழை!

*

சைவமான என்னை
அசைவமாக்கிப் போகிறது
உன் மேல் விழும்
மழைத்துளி!

*

மழை
உன் அருகாமையில்
அருமையாகவும்
தூரத்தில்
அவஸ்தையாகவும்!

*

மழை வேண்டி
வருபவர்களையெல்லாம்
விரட்டியடித்தபடி இருக்கிறான்
கடவுள்!
படிப்பிற்காக வெளியூரிலிருக்கும்
உன்னை ஊருக்குள்
அழைத்து வரும்படி!

*

ஊரிலிருந்து
நீ வருவாயென
நேற்றே வந்து
வாசல் தெளித்துப் போயிருந்தது
மழை!

*

இன்றும் விடாமல்
பெய்தபடி
நீ
என்னைக் குடைக்குள்
அழைத்துக் கொண்ட
அவ்விரவின் மழை!

*

என் கவிதைகளுக்கு
என்ன மேன்மை கிடைத்திடக்கூடும்
உன் கையால்
மழை நாளில்
காகித கப்பல்களாவதைவிட!

*

மழை நின்ற
கணத்தின் இலைப்போல்
முகமெல்லாம்
திட்டுத்திட்டாய்
உன் முத்தங்கள்!

*

சிறுமழை
பெருமழை
எதுவும்
மழையை மட்டும் கொண்டுவருவதில்லை
உன் நினைவுகளையும்!

*

நம் உலகில்
நான்
நீ
பின், நமக்கான மழை!

*

நீ மழையாக
நான் துளியாக
மெல்ல பொழியட்டும்
காதல்!

*

முகிலின் நிராகரிப்பு
மழை!
உன்னின் நிராகரிப்பு
என் கண்ணீர்!

*

குழைந்தைகளுடன்
நீ நனைந்திருக்க
குதூகலமாய்
பொழியத் தொடங்கியது மழை!

*

மின்னல்
மழையின் கிறுக்கலென்றால்
உன் விரல்
என்மேல் வரைந்ததை
என்னென்பது?!

*

மழை
மழையை மட்டும் குறிக்காது
காதலையும்!

*

நீ பெண்ணாகவும்
நான் ஆணாகவும் ஆனதின் இரகசியம்
துலங்கியது
ஓர் மழையிரவில்!

*

நீ
பெண்ணின் ஓர்துளி
நான்
ஆணின் ஓர்துளி
வா,
காதல் பொழிவோம்!

*

என் வேர்கள்
காத்திருக்கின்றன
உன்
மழைக்காக!

*

மழை
வானின் ஓர்துளி
நீ
அழகின் ஓர்துளி!

No comments:

Post a Comment